BREAKING NEWS
latest

Gulf News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Gulf News News, Articles, Gulf News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Tuesday, July 22, 2025

விசா மோசடிக்கு எதிராக குவைத் கடுமையான நடவடிக்கையை தொடங்கியது

குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை ஆட்கடத்தல் தொடர்பான போலி முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது

Image : ஷேக் ஃபஹத் யூசப்

விசா மோசடிக்கு எதிராக குவைத் கடுமையான நடவடிக்கையை தொடங்கியது

குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான செயல்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசப்பின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகத்தில் உள்ள குடியிருப்பு விவகார புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிறப்புத் திட்டங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது, விசா வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், இதற்காக போலி உரிமங்களை கைவசம் வைத்திருப்பவர்களும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்பூர்வமாகக் கையாளப்படுவார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், யாரும் அநியாயமாக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்றும் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

விசா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்பான்சர்கள் மற்றும் முகவர்களைக் கண்டுபிடிக்க அமைச்சகம் இனிமுதல் ஒரு புதிய முறையைப் பின்பற்ற உள்ளது. அதன்படி குடியிருப்புச் சட்டத்தை மீறி வேலை செய்பவர்கள் பிடிபட்டால், விசா வழங்கிய நபர்களின் தகவல்கள் பிடிபட்ட அவர்களிடமிருந்து சேகரிக்கப்படும், பின்னர் முகவர்கள் கண்காணிக்கப்படுவார்கள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு மனித கடத்தல் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.

சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 தினார் வரை அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது. கடத்தப்பட்ட நபர்கள் மற்றும் விசாக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அபராதம் அதிகரிக்கும். குற்றவாளி அரசு ஊழியராக இருந்தால் தண்டனை இரட்டிப்பாகும் என்றும் சட்டம் கூறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Visa | Indian Workers | Visit Visa

Add your comments to Gulf News

Sunday, July 20, 2025

குவைத் விமான நிலையத்தில் 4 வ‌ங்கதேச பயணிகள் 200 கிலோ மெல்லும் புகையிலையுடன் பிடிபட்டனர்

குவைத் விமான நிலைய‌ம் வழியாக பெரும் அளவிலான புகையிலை பொருட்களை கடத்த முயன்ற 4 வங்காளதேச பயணிகள் நேற்றும் இன்றுமாக பிடிபட்டதாக சுங்கத்துறை இன்று மதியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது

Image : பிடிபட்ட புகையிலை பொருட்கள்

குவைத் விமான நிலையத்தில் 4 வ‌ங்கதேச பயணிகள் 200 கிலோ மெல்லும் புகையிலையுடன் பிடிபட்டனர்

குவைத் விமான நிலையத்தில் போதைப்பொருளை தடுப்பதற்கான சோதனைகளை தொடந்து நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தலைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, விமான நிலையத்தின் முனையம் 4 (T4) யின் வழியாக நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த பயணிகளிடம் இருந்து அதிக அளவு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(மெல்லும் புகையிலை) பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

இரண்டு தனிதனியான சம்பவங்களில், மெல்லும் புகையிலையை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக நான்கு வங்காளதேச பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று ஒரு பயணியிடமிருந்து 41 கிலோகிராம் மெல்லும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்த நாளான இன்று மற்ற மூன்று வங்காளதேச பயணிகளிடமிருந்து 159 கிலோகிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம், பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த அளவு 200 கிலோகிராமை எட்டியுள்ளது.

இதை தொடர்ந்து விமான நிலைய சுங்கத்துறை உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து,பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான அறிக்கைகளை தயார் செய்து, கைது செய்யப்பட்ட நபர்களை சம்பந்தப்பட்ட குற்றப்பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தது. இந்த வழக்கில் குவைத்திற்குள் இந்த புகையிலை பொருட்களை கடத்தி வருவதற்கு உதவி மற்றும் இவற்றை விமான நிலையத்தில் இருந்து பெற்று செல்ல காத்திருந்த மற்ற நபர்களைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து பிடிபட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Airport | Customs Checking | Tobacco Seizure

Add your comments to Gulf News

Saturday, July 19, 2025

குவைத்தில் இந்திய விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் இருந்து இயங்கும் இந்திய விமானங்களின் வாராந்திர இருக்கைகளின் எண்ணிக்கை 12,000-லிருந்து 18,000-ஆக அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Image : பதிவுக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் இந்திய விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவிற்கும்-குவைத்திற்கும் இடையே கடந்த வாரம் கையெழுத்தான புதிய விமான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவை தலைமையிடமாக கொண்ட பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் அதன் வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்த முயற்சிகளைத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டு நெட்வொர்க்குகளை மறுசீரமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. புதிய விமான ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வாரந்திர இருக்கைகளின் எண்ணிக்கை 6,000 அதிகரித்துள்ளது.

தற்போது இண்டிகோ, ஏர் இந்தியா, ஆகாஷ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 2025 முதல் குவைத்துக்கு புதியதாக கூடுதல் விமானங்களின் சேவை தொடங்கவும், ஏற்கனவே உள்ள சேவைகளை விரிவுபடுத்தவும் திட்டங்களைத் தயாரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு விமான நிறுவனமும் தேவையான இடங்களை(ஸ்லாட்) பெற குவைத் சர்வதேச விமான நிலையத்துடன் தீவிரமான பேச்சு வார்த்தைகள் மூலம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் குவைத்துக்கு வாரத்திற்கு கூடுதலாக 5,000 இருக்கைகளை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கிடையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாஷ் ஏர் சுமார் 3,000 இருக்கைகளைக் கோரியுள்ளதாகவும், ஏர் இந்தியா 1,500 இருக்கைகளைக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை, திருவனந்தபுரம், கொச்சி மற்றும் பெங்களூர் போன்ற பயணிகள் அதிகமாக பயணம் செய்கின்ற நகரங்களிலிருந்து புதிய விமானங்கள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

ஜூலை 21 ஆம் தேதிக்குள் திறன் விரிவாக்கத்திற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு குவைத் மற்றும் இந்திய விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையே ஜூலை 16-ஆம் தேதி புதிய விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், வாராந்திர இருக்கைகளின் ஒதுக்கீடு 12,000-லிருந்து 18,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இரு நாடுகளும் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் தமிழர்கள் அதிகமாக பயணம் செய்கின்ற தமிழக-கேரளா எல்லையான திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளின் பயணச்சீட்டு கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளாவின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயணம் செய்வதால் இந்தியாவின் எந்த விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணச்சீட்டு கட்டணத்தை விட திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வழியாக பயணிக்க பயணச்சீட்டு கட்டணம் எப்போதும் ஒருபடி அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Airport | Indian Airport | Flight Tickets

Add your comments to Gulf News

Thursday, July 17, 2025

குவைத் குற்றவியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடி குற்றவாளியான நபரை கைது செய்தனர்

குவைத்தில் பணத்திற்கு ஈடாக சூனியம் செய்து மோசடி செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்

Image : கைது செய்யப்பட்ட நபர்

குவைத் குற்றவியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடி குற்றவாளியான நபரை கைது செய்தனர்

குவைத் குற்றவியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடி குற்றவாளியான நபரை கைது செய்தனர். பணத்திற்கு ஈடாக மந்திரம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த இந்த நபரை கடந்த சில நாட்களாக கண்காணித்து ஆதாரத்துடன் அதிகாரிகள் சிக்க வைத்தனர்.

குற்றவாளி குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரையும் ஏமாற்றி, எதிர்காலத்தை கணிக்கவும், குடும்ப மற்றும் நிதி பிரச்சினைகளை தீர்க்கவும் முடியும் என்று நம்ப வைத்தார். அவரது இந்த சேவைகளுக்காக பெரும் தொகையையும் பெற்று வந்தார். மோசடி பற்றிய தகவல்களைப் பெற்ற அதிகாரிகள், ரகசிய நடவடிக்கை மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.

மேலும் மந்திர புத்தகங்கள், பல்வேறு திரவங்கள், பொருட்கள், காகித சுருள்கள், பணம் சேகரிக்கும் பெட்டிகள் மற்றும் சூனிய சடங்குகளுக்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு ஆடைகள் உள்ளிட்ட சூனியத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களையும் குற்றவாளியின் அறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் ஆகியவை வளைகுடா நாடுகளில் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட ஒரு செயல் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fraud Job | Black Magic | Kuwait Police

Add your comments to Gulf News

குவைத் அனைத்து வகையான விசிட் விசாக்களுக்கான ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

குவைத் உள்துறை அமைச்சகமானது அனைத்து வகையான விசிட் விசாக்களை எளிதாக பெற இன்று புதன்கிழமை ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

Image : குவைத் விமான நிலையம்

குவைத் அனைத்து வகையான விசிட் விசாக்களுக்கான ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

https://kuwaitvisa.moi.gov.kw என்பது குவைத் உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆன்லைனில் விசா பெறுவதற்கான மின்னணு தளமாகும். இதன் வழியாக தனிநபர்கள் பல்வேறு வகையான மின்னனு விசாக்களுக்கு விண்ணப்பிக்கவும், அவைகளின் விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும், விசா தகவல்களைச் சரிபார்க்கவும் மற்றும் பிற குடியேற்றம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு அணுகவும் அனுமதிக்கிறது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல்-யூசப்பின் உத்தரவுகளின் பேரில், உள்துறை அமைச்சகத்தின் செயல் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் அலி அல்-அத்வானியின் மேற்பார்வையின் கீழ், “குவைத் விசா தளம்" அறிமுகப்படுத்துவதாக உள்துறை அமைச்சகம் இன்று(16/07/25) புதன்கிழமை காலையில் அறிவித்தது.

குவைத்துக்கு வருகை தர விரும்பும் நபர்களுக்காக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா, வணிக, குடும்ப மற்றும் அரசு துறை விசிட் விசாக்களை பெற இந்த தளமானது உள்துறை அமைச்சகத்தின் சட்ட விதிமுறைகள் மற்றும் பொது குடியிருப்பு விவகாரத்துறையால் வழங்கப்பட்ட தேவைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, குடும்ப, வணிக மற்றும் அரசு துறை விசிட் விசாக்கள் பெற தகுதியான பயனாளிகள் யார் யார் என்ற விவரங்கள் மற்றும் ஒவ்வொரு விசாவுக்கும் நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கும் காலம் பற்றிய தகவல்களையும் இந்த தளம் வழங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து வருகை விசாக்களும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டவை என்றும், பார்வையாளர் மற்றும் ஸ்பான்சரிடமிருந்து அனைத்து துணை ஆவணங்களும் தேவை என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது, அது தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் பின்வரும் விதிமுறை கட்டாயமாகும். மேலும் உங்கள் பாஸ்போர்ட் விசா பெற விண்ணப்பிக்கும் முன் குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்(6 months Validity) விதத்தில் இருக்க வேண்டும் எனவும், அனைத்து நாட்டினரும் இந்த ஆன்லைன் விசாக்களுக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும், எனவே தயவுசெய்து முதலில் விசா கொள்கையைச் சரிபார்க்கவும்(விசா விதிமுறைகளை சரிபார்க்கவும்) வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விசா வகை மற்றும் விசா பெற தேவையான ஆவணங்களைப் பொறுத்து செயலாக்க நேரங்கள் மாறுபடும். அனுமதிக்கப்பட்ட தங்கும் காலத்தை மீறுவது அல்லது விசா நோக்கத்தை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட விசா நிபந்தனைகளை மீறுவது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கும் மற்றும் அபராதங்களுக்கும் வழிவகுக்கும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது .

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Visit Visa | Online Visa

Add your comments to Gulf News

Thursday, July 10, 2025

அமீரகம் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

அமீரகத்தின் அபுதாபி எமிரேட்டில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த பெண் மற்றும் குழந்தை

அமீரகம் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

ஷார்ஜாவில் இந்தியா,கேரளா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணும் அவரது ஒன்றரை வயது மகளும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.கொல்லம் மாவட்டத்தில் உள்ள கேரளபுரத்தைச் சேர்ந்த நிதீஷ் என்பவருடைய மனைவி விபஞ்சிகா(33) மற்றும் அவருடைய குழந்தை வைபவியுமே சடலமாக மீட்கப்பட்டனர். முதல்கட்ட அறிக்கைப்படி தற்கொலை செய்த கயிற்றை போட்டு முதலில் ஒரு முனையில் குழந்தையை தொங்க விட்ட பிறகு மறுமுனையில் விபஞ்சிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக,பெண்ணின் கழுத்தில் தற்கொலைக்கான தெளிவான அறிகுறிகள் காணப்பட்டதாகக் சம்பவ இடத்தைப் பரிசோதித்த மருத்துவர் கூறினார்.

குழந்தையின் மரணத்திற்கு தாயே காரணம் என்பது ஆரம்ப கட்ட தடயங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் ஷார்ஜாவின் அல் நஹ்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மனிதவளத்துறையில் பணிபுரியும் விபஞ்சிகாவும், துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வசதி வாரிய பொறியாளரான நிதிஷுக்கும் இடையே கடந்த சிறிது காலமாக நல்லுறவில் இல்லை எனவும், இருவரும் தனித்தனி இடங்களில் வசித்து வந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வரதட்சணை கேட்டு விபாஞ்சிகாவை நிதிஷ் தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், விவாகரத்து பெற அழுத்தம் கொடுத்ததாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். இருப்பினும், விபாஞ்சிகாவுக்கு விவாகரத்து செய்வதில் ஆர்வம் இல்லை. விவாகரத்துசெய்தால் உயிருடன் வாழ மாட்டேன் என்று அந்தப் பெண் தனது வேலைக்காரியிடமும் தாயிடமும் கூறி வந்தாள். விவாகரத்து தொடர்பாக விபாஞ்சிகாவுக்கு வழக்கறிஞரின் நோட்டீஸ் நேற்று பிற்பகுதியில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் தனது மகளைக் கொன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்த அமீரக அதிகாரிகளிடம் கேட்போம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். பணிப்பெண் வந்து நீண்ட நேரமாக அழைத்தும் கதவு உட்பட்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த பிறகு, அவசரகாலப் மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பெண்ணின் உடல் மதியம் 2 மணியளவில் மருத்துவமனைக்கும், பின்னர் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கும் மாற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அல் புஹைரா போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Baby Mother | Uae Suicide | Indian Family

Add your comments to Gulf News

Tuesday, July 8, 2025

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த குழந்தை ஜாசா ஹைரா

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்:

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் நடந்த சாலை விபத்தில் இந்திய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கேரளா மாநிலம் , கண்ணூர் மாவட்டம், மட்டனூரைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஜாசா ஹைரா என்பது தெரியவந்துள்ளது. அவரது தந்தை நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சலாலாவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஆதாமில் வைத்து விபத்துக்குள்ளானார்கள்.

இன்று(07/07/25) திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. பலத்த தூசிக்காற்று காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. வாகனத்திலிருந்து தெறித்து வெளியே விழுந்த ஜாசா ஹைரா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் பெரிய அளவில் இல்லை, அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நடைமுறைகள் முடிந்ததும் உடல் இன்று மாலையில் இந்தியா கொண்டு செல்லப்படும் என்று KMCC அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Baby Death | Oman Accident | Indian Family

Add your comments to Gulf News

Sunday, July 6, 2025

சவுதியில் ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து தமிழர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்த துயரமான செய்தி மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் உள்ளிட்டவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது

Image : புகைப்படம் உயிரிழந்த சசி அவர்கள்

சவுதியில் ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து தமிழர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சசி(52). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். சசி கடந்த 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக சவுதியில் வேலை செய்து வந்தார். பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய சசி சில வருடங்கள் ஊரில் இருந்தார். பின்னர் மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார். அவருடைய அண்ணணும் அங்கு வேலை செய்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் சசி உறவினர் ஒருவர் திருமண நிகழ்ச்சி இருந்ததாலும், சென்று இரண்டு ஆண்டு கடந்ததாலும் சொந்த ஊருக்கு அடுத்த ஓரிரு நாட்களில் திரும்ப திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பாக மனைவி மற்றும் மக்களிடம் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சசி தங்கியிருந்த இடத்தில் மாடிப்படியில் ஏறிய போது விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்ததாக அண்ணன் ஊருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அவரது மனைவி,குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் கதறி அழுதனர். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற சசி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்ட நடவடிக்கைகள் முடித்து சசியின் சடலத்தை விரைவாக ஊருக்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறையும், மாநில அரசும் மற்றும் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Death | Tamil Worker | Saudi Worker

Add your comments to Gulf News

Saturday, July 5, 2025

குவைத்தில் தமிழர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன் என்ற தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்

Image : மரணமடைந்த பக்ருதீன்

குவைத்தில் தமிழர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது:

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன்(வயது-47) என்ற இந்தியா, தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணி அளவில் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த மேலகொண்டாழி தமிழர் தெருவை சேர்ந்தவர் ஆவார்,இவருடைய தந்தை பெயர் அபுபக்கர் என்பது ஆகும்.

இதையடுத்து சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக முடிக்கப்பட்டு உடல் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணி அளவில் குவைத்திலுள்ள சுபஹான் தஹார் மையவாடியில் இஷா தொழுகைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள தமிழ் மக்கள் பலர் நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கான அனைத்து வேலைகளையும் சமூக சேவகரும் மற்றும் குவைத் இந்திய தூதரக பிரதிநிதியுமான அலிபாய் அவர்கள் செய்து முடித்தார். இவர் குவைத்திலுள்ள மக்கள் சேவை மையத்திலும் இணைந்து செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Death | Tamil Worker | Kuwait Workers

Add your comments to Gulf News

Friday, July 4, 2025

குவைத்தில் வாடகை டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

குவைத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார்

Image : மருத்துவமனையில் பெண் அனுமதிக்கப்பட்ட காட்சி

குவைத்தில் வாடகை டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

குவைத்தில் டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை குழந்தை பெற்றெடுத்தார். சால்மியா பிளாக் 10-இல் தனது குடும்பத்துடன் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குறிப்பிட்ட பெண்ணுக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்ட பிறகு, அவரது கணவர், குவைத்தில் இயங்கி வருகின்ற "யாத்திரா டாக்ஸி" குழுவை சேர்ந்த மனோஜ் என்பவருடைய டாக்ஸியை அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அழைத்தார். இதை அறிந்த அவர் இளம்பெண்ணை சபா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தார். இருப்பினும், அவர்கள் வாகனத்தில் ஏறியவுடன், அவர்களுக்கு பிரசவ அறிகுறிகள் தெரிந்தன. இதைத் தொடர்ந்து, வாகனத்தின் ஓட்டுநர், கணவரின் உதவியுடன் வாகனத்தின் பின் இருக்கையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

தொடந்து ஐந்தாவது ரிங் ரோடு வழியாக மருத்துவமனைக்கு கடந்து செல்லும் போது, அந்த இளம் பெண் மன்னரின் பயான் அரண்மனை அருகில் வைத்து டாக்ஸியிலேயே பிரசவித்தார். பின்னர் உடனடியாக அந்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு வந்தவுடன், மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையை மகப்பேறு வார்டுக்கு மாற்றி,மேலும் சிகிச்சை அளித்தனர். குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்ணுக்கு இது மூன்றாவது பிரசவம். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Hospital | Tamil Worker | Kuwait Workers

Add your comments to Gulf News

Thursday, July 3, 2025

குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர்

குவைத்தில் போலி முகவரி உருவாக்கி வசிக்கின்ற எத்தனை பேர் சிக்க போறாங்களோ தெரியலியே கடவுளே.....

Image : கைது செய்யப்பட்ட நபர்கள்

குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர்

குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர். அரசின் குற்றப் புலனாய்வுத்துறை, சிவில் தகவல் ஆணையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், முகவரிகள் பெற இடைத்தரகர்களாக செயல்பட்ட நபர்களும் மற்றும் அவர்களுக்கு பணம் கொடுத்து போலியாக முகவரிகள் பெற காத்திருந்த 7 நபர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு கும்பலை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்தியில் சிக்கிய ஊழியர் தனது அதிகாரப்பூர்வ பதவியைப் பயன்படுத்தி சிவில் தகவல் ஆணையத்தின் அரசு இணையதள மின்னணு அமைப்பில் நுழைந்து முகவரி பெறவேண்டிய வெளிநாட்டினரான நபர்கள் நேரில் ஆஜராகாமல், சட்டபடி தேவையான ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கவோ செய்யாமல் போலியான முகவரிகளை உருவாக்கிய குற்றத்தைச் செய்து வந்துள்ளார்.

ஒவ்வொரு போலியான வசிப்பு முகவரிக்கும் 120 தினார் வரை கட்டணமாக(லஞ்சமாக) வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து குவைத்துக்கு உள்ளேயும் வெளியேயுமாக பல முகவர்களுடன் இணைந்து இதுபோன்ற 5,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத போலியான முகவரிகளை அவர் உருவாக்கியதை விசாரணையில் ஒப்புக்கொண்டார். பிடிபட்ட நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக் குழு இரண்டு தரகர்களையும், போலியான முகவரி பெற அவர்களுக்கு பணம் கொடுத்த ஏழு நபர்களையும் கைது செய்தனர்.

குற்றவாளியான ஊழியர் இப்படி கிடைத்த பணத்தை கொண்டு நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் பிற ஆடம்பரப் பொருட்களை வாங்கப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக அரசின் பொது வழக்கறிஞர் பிரிவு அலுவலகத்தில் குற்றவாளிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டன. இவனிடம் போலியாக முகவரி ரெடி பண்ணின எத்தனை பேர் இவன் வாக்குமூலம் அடிப்படையில் சிக்க போறாங்களோ தெரியலியே.... பிடிபட்ட நபர்கள் குறித்த கூடுதல் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை...போலியாக முகவரியில் யாராவது வசித்து வந்தால் எதுக்கும் இந்த புகைப்படத்தை சற்று உற்று நோக்குவது நல்லது

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Fake Address | Kuwait Workers

Add your comments to Gulf News

குவைத்தில் கோடையில் அதிகரிக்கும் தொடர் தீ விபத்துகள் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

குவைத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 தீ விபத்துகள் ஒருவர் மரணமடைந்தார் 9 பேர் வரையில் காயமடைந்தனர்

Image:தீ விபத்தின் புகைப்படம்

குவைத்தில் கோடையில் அதிகரிக்கும் தொடர் தீ விபத்துகள் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

குவைத்தில் உள்ள அல்-குரைன் சந்தையின் முதல் மாடியில் உள்ள ஒரு உணவகத்திலும் அருகிலுள்ள கடைகளிலும் இன்று(03/07/25) வியாழக்கிழமை காலையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்தனர். அல்-பைராக் மற்றும் அல்-குரைன் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக பொது தீயணைப்புப் படை அறிவித்தது.

Image: தீ விபத்தின் புகைப்படம்

அதேபோல் இன்று(03/07/25) வியாழக்கிழமை காலையில் ஃபர்வானியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. இதை ஃபர்வானியா மற்றும் சுபான் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் வரையில் காயமடைந்தனர்.

Image: தீ விபத்தின் புகைப்படம்

மேலும் அதே ஃபர்வானியா பகுதியிலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் நேற்று(02/07/25) புதன்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் அறை முழுமையாக எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்திலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் ஃபர்வானியா மற்றும் சுபான் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். உடல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்தவர் எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. இந்த மூன்று தீ விபத்துகள் தொடர்பாகவும் விசாரனை தொடங்கியுள்ளது.

Image: தீ விபத்தின் புகைப்படம்

அதேநேரம் குவைத்தில் உண்மையான கோடைக்காலம் இன்று(03/07/25) வியாழக்கிழமை தொடங்கும் என்றும் அல்-உஜைரி அறிவியல் ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது. இதையடுத்து கடுமையான வெயில் அடுத்த 13 நாட்களுக்கு நீடிக்கும் இந்த நாட்களில் வானிலை வளிமண்டல வெப்பநிலை தற்போதைய வெப்பத்தை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும்.

Image: தீ விபத்தின் புகைப்படம்

மேலும் இந்த நாட்களில் நாடு கடுமையான வறட்சி மற்றும் வெப்பக்காற்றை அனுபவிக்கும் என்றும், சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகளில் இந்தப் பருவம் "அல்-ஹக்கா" என்று அழைக்கப்படுகிறது என்றும் அறிவியல் மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கடுமையான கோடை காலத்தில் தீ விபத்துக்கு வாய்புகள் அதிகம், எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Image: தீ விபத்தின் புகைப்படம்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Fire Accident | Kuwait Workers

Add your comments to Gulf News

குவைத்தின் Wafra சாலை விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவைத்தின் அல் வஃப்ரா சாலையில் கார் மற்றும் தண்ணீர் லாரி மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

Image : வஃப்ரா சாலை விபத்து

குவைத்தின் Wafra சாலை விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவைத்தின் Arifjan பகுதியை சேர்ந்த தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் நேற்று(02/07/25) மாலையில் அல் வஃப்ரா சாலையில் தண்ணீர் லாரியின் பின்புறத்தில் கார் ஒன்று வந்து பயங்கரமாக மோதிய விபத்தில் காரில் இருந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த இருவருடைய உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் எனவும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் குறித்த கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. விபத்து ஏற்பட்ட சூழ்நிலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றன.

Image : ஃபர்வானியா குடியிருப்பு தீ விபத்து

அதேபோல் நேற்று இரவு Farwaniya பகுதியிலுள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் அறை முழுமையாக எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்திலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று Farwaniya மற்றும் Subhan தீயணைப்பு துறை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்தவர் எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Road Accident | Car Accident

Add your comments to Gulf News

Wednesday, July 2, 2025

ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்

ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

Image credit:ONA

ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்

ஒமானின் அல் தகிலியா கவர்னரேட்டில் இன்று(02/07/25) புதன்கிழமை காலையில் நடந்த பயங்கரமான பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். பேருந்தில் 18 பயணிகள் இருந்தனர். இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பேருந்தில் இருந்த மேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது ஒமானின் நிஸ்வா மற்றும் இஸ்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்கியின் அல் ருசைஸ் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து ஒரு சாலையின் ஓரத்தில் உள்ள திட்டில் மோதியதாக ராயல் ஒமான் காவல்துறை வெளியிட்டுள்ள முதல்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த துயரமான விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்து தொடர்பாக விசாரணை துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Oman Police | Road Accident | Bus Accident

Add your comments to Gulf News

Monday, March 24, 2025

குவைத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல்-ஜரல்லா காலமானார்

குவைத்தின் சிறந்த அதிகாரியும் இந்திய சமூகத்தினருடன் நெருக்கம் பேணிவந்த நபருமான காலித் அல்-ஜரல்லா காலமானார்

Image : காலித் அல்-ஜரல்லா அவர்கள்

குவைத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல்-ஜரல்லா காலமானார்

குவைத்தின் சிறந்த அதிகாரியும் மற்றும் முன்னாள் வெளியுறவு இணை அமைச்சருமான காலித் அல்-ஜரல்லா(வயது-78) அவர்கள் இரவு காலமானார். அவர் 1971 ஆம் ஆண்டு குவைத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, அதே ஆண்டில் வெளியுறவு அமைச்சகத்தில் வேலைக்காக சேர்ந்தார். பின்னர் அவர் பல்வேறு வெளியுறவுத்துறை பதவிகளை வகித்ததை தொடந்து, 1999 இல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சர் ஆவதற்கு முன்னதாக 1972 முதல் 1974 வரை லெபனானுக்கான குவைத்தின் தூதராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் குவைத்துக்குத் திரும்பிய பிறகு, வெளியுறவு அமைச்சகத்தில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார். அவர் 1974 முதல் 1987 வரை அரபு விவகாரப் பிரிவின் தலைவராக பதவி வகித்தார். 1987 ஆம் ஆண்டில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் விவகாரங்களுக்கான துறையின் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

1999 ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஜனவரி 2021 இறுதியில் அமைச்சர் பதவியில் இருந்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்துடனும், இந்திய தூதரகத்துடனும் அவர் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்த சிறந்த நபர் என்பது அமைப்புகளில் இயங்கி வருகின்ற இந்தியர்களுக்கு நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Foreign Minister | Indian Community | Kuwait Minister

Add your comments to Gulf News

Sunday, March 23, 2025

குவைத்தில் 9 நாட்கள் ஈத் விடுமுறை என்ற கனவுக்கு டிஸ்ட் வைத்து சிவில் சர்வீஸ் கமிஷனின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஈத் தொடர் விடுமுறை 9 நாட்கள் கிடைக்குமா அல்லது 5 நாட்களாக சுருங்குமா என்பது பிறை தென்படும் தேதியை பொறுத்து இந்த வருடம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது

Image : குவைத் சிட்டி டவர்

குவைத்தில் 9 நாட்கள் ஈத் விடுமுறை என்ற கனவுக்கு டிஸ்ட் வைத்து சிவில் சர்வீஸ் கமிஷனின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்த ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுப்பு எடுக்க முடியும் என்ற கனவில் இருந்த அரசு ஊழியர்களுக்கு சிவில் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு பேரிடியை கொடுத்துள்ளது. நாட்டில் இந்த ஆண்டிற்கான ஈத் விடுமுறை மார்ச்-30,2025 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது. ஆனால் மார்ச்-29,2025 சனிக்கிழமை மாலையில் பிறை தெரிவதன் அடிப்படையில் மட்டுமே ஈத் விடுமுறை எப்போது முடிவடைகிறது என்பதை அறிய முடியும். மார்ச்-29,2025 சனிக்கிழமை மாலையில் பிறை தென்பட்டால் மார்ச் 28 மற்றும் 29 வார விடுமுறை நாட்களைத் தவிர, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் வரையிலான 3 நாட்கள் ஈத் விடுமுறை உட்பட தொடர்ந்து 5 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். இதை தொடந்து ஏப்ரல்-2,2025 புதன்கிழமை முதல் வேலை நாள் தொடங்கும்.

ஆனால் மார்ச்-29,2025 அன்று பிறை தென்படாத சூழ்நிலை ஏற்பட்டால் மார்ச்-30,2025 ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல்-3,2025 வியாழன் வரை தொடர்ந்து 5 நாட்கள் வரை பொது விடுமுறையும், விடுமுறை தொடங்குவதற்கும் முன்னரும்-பின்னரும் உள்ள 4 நாட்கள் வார விடுமுறை உட்பட 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும், இதையடுத்து ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வேலை நாள் தொடங்கும். இதில் டிஸ்ட் எங்கே என்று தானே கேட்கிறீங்க....??? மீதியை படியுங்கள் புரியும்......

அதாவது ஏப்ரல் 2 வேலை நாளா இல்லையா என்பதை அறிய ஊழியர்கள் மார்ச் 29 சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் சிவில் சர்வீஸ் கமிஷன் தற்போது வெளியிட்ட அறிவிப்பின்படி ஏப்ரல் 2, 3(புதன் மற்றும் வியாழன்) தேதிகளில் விடுப்பு எடுப்பவர்கள் வருகின்ற மார்ச்-27 வியாழக்கிழமைக்குள் விடுப்புக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்பு விடுப்பு விண்ணப்பம் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மருத்துவ விடுப்பு, அவசரகால விடுப்பு போன்றவற்றை பயன்படுத்தி விடுமுறை எடுத்து நழுவும் நபர்களுக்கு சிவில் சர்வீஸ் கமிஷன் கட்டுபாடு விதித்துள்ளது. இந்த நாட்களில் மருத்துவ விடுப்பு மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே பெற முடியும் என்று கமிஷன் தடை விதித்துள்ளது.

அதேபோல் அவசரகால விடுப்பு ஒரு நாள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அவசர விடுமுறை அனுமதிக்கப்படாது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. அனுமதியின்றி இந்த நாட்களில் பணிக்கு வராத ஊழியர்களின் வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் இந்த விடுமுறை பதிவு செய்யப்படும் என்றும், இந்த நாட்கள் வருடாந்திர விடுப்பில் இருந்து கழிக்கப்படும் எனறும் அறிவிக்கையில் எச்சரித்துள்ளது. எங்களுக்கு கிடைக்காத 9 நாட்கள் தொடர் விடுமுறை உங்களுக்கு மட்டும் எதுக்குடா....??? என்ற தனியார் கம்பெனி ஊழியர்கள், வீட்டு பணியாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்கின்ற ஊழியர்களின் குமுறல் சத்தம் சிவில் சர்வீஸ் கமிஷனுக்கு கேட்டிருக்குமோ.....????

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Official Holiday | Eid Holidays | Kuwait Csc

Add your comments to Gulf News

குவைத்தில் வண்டி ஏற்றி தொழிலாளியை கொடுரமாக கொலை செய்த வழக்கில் குவைத் குடிமகன் சிக்கியுள்ளான்

குவைத் காவல்துறை அதிரடி நடவடிக்கையின் விளைவாக கடந்த வாரம் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தொழிலாளியை கொலை செய்த குடிமகன் கைது செய்யப்பட்டார்

Image: தொழிலாளி வண்டி ஏற்றி கொலை செய்யபட்ட இடம்

குவைத்தில் வண்டி ஏற்றி தொழிலாளியை கொடுரமாக கொலை செய்த வழக்கில் குவைத் குடிமகன் சிக்கியுள்ளான்

குவைத்தின் முட்லா பகுதியில் மொபைல் பக்காலாவில் இருந்து பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் பணம் செலுத்தாமல் வாகனத்தில் கடக்க முற்பட்டபோது தடுக்க முயன்ற வெளிநாட்டு ஊழியர் வாகனம் மோதி உயிரிழந்த வழக்கில் குவைத் குடிமகன் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் இது தொடர்பான செய்தி கடந்த வாரம் நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம் வாசகர் பல படித்திருப்பீர்கள்.

நாட்டின் குற்றப் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஹமீத் அல்-தவாஸ் அவர்கள் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை நடத்தி விசாரணையில், ஒரே வாரத்தில் குற்றவாளி பிடிபட்டார். குற்றவாளி குவைத் குடிமகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் பக்கலாவை(கடைகளை) குறிவைத்து கடந்த காலங்களில் இது போன்ற பல குற்றங்களைச் செய்திருப்பதும் விசாரணை யில் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த குற்ற சம்பவங்களில் எதுவிலும் ஊழியர்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படுத்தவில்லை. பலருக்கும் காயத்தை இவர் ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இம்மாதம் 14-ஆம் தேதி ஜஹ்ரா கவர்னரேட்டின் அல்-முட்லா பகுதியில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளி, உயிரிழந்த தொழிலாளி வேலை செய்யும் மொபைல் பக்காலாவுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் வாகனத்தில் ஏறிச் செல்ல முயன்றார். இதையடுத்து கடையின் ஊழியர் குற்றவாளியை தடுத்து நிறுத்த வாகனத்தில் தொங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் குற்றவாளி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றதால் ஊழியர் வாகனத்தின் நடுவில் சிக்கிக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு ஜஹாரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தொடர்பான கூடுதல் விபரங்களும் தெரியவில்லை.

இதையடுத்து குற்றவாளி சில்வர் நிற நான்கு சக்கர வாகனத்தில் பக்காலாவில் சென்றது சிசிடிவி காட்சிகளில் இருந்து தெளிவானது. நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவரின் வாகனம் 15 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையது என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து குற்றவாளியை கைது செய்ய தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் சுலைபியா பகுதியில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு வெளிநாட்டு ஊழியர் ஜஹாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறி்ப்பிடத்தக்கது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி இதுவரை செய்த குற்றங்கள் தொடர்பாக தொடந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Kuwaity Man | Shop Worker

Add your comments to Gulf News

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி 5 வருடங்கள் என்பது உள்ளிட்ட திருத்தப்பட்ட புதிய போக்குவரத்து சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி இனிமுதல் 5 வருடங்களாக இருக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image : குவைத் ஓட்டுநர் உரிமத்தின் மாதிரி புகைப்படம்

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி 5 வருடங்கள் என்பது உள்ளிட்ட திருத்தப்பட்ட புதிய போக்குவரத்து சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது

குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும்(காலாவதி) காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகள் 425/2025 மற்றும் 76/1981 இன் கீழ் உள்ள பிரிவுகளில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவைத் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டு திருத்தப்பட்ட புதிய சட்டம் இன்று(23/03/25) ஞாயிறுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

புதிய சட்டத்தின்படி பல்வேறு வகையான ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும்(காலாவதி) காலம் மற்றும் பயன்பாட்டு வரம்புகள் மாறும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் புதிய சட்டப்படி 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் நடைமுறையில் இருந்து வருகின்ற சட்டப்படி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவரின் குடியிருப்பு அனுமதியின்(விசா காலவதியை) கால அளவை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டினருக்கு இவை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த சட்டமே தற்போது ரத்து செய்யப்பட்டு 5 வருடங்களாக காலவதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், குடிமக்களுக்கு 15 ஆண்டுகளும், குடிமக்கள் அல்லாதவர்களுக்கு(பிதூனி) தங்களுடைய அடையாள அட்டையின் காலாவதி அடிப்படையிலும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செய்யப்படும். மேலும் தற்போது ஓட்டுநர் உரிமம் கைவசம் உள்ள வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்கள் காலாவதியாகும் போது புதிய சட்டத்தின்படி 5 ஆண்டுகளுக்கு ஓட்டுனர் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait License | Indian Worker

Add your comments to Gulf News

Tuesday, November 12, 2024

குவைத்தில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விடுதலை

குவைத்தில் விசா ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு போதைப்பொருள் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தமிழருக்கு தாயகம் திரும்ப வழி பிறந்துள்ளது

Image : குவைத் அமீர்

குவைத்தில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விடுதலை

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவியான இளைஞர் ஒருவர் ஆயுள் தண்டனை(வாழ்நாள் முழுவதும் சிறை) பெற்று குவைத்தில் சிறையில் இருந்தார். குவைத் அமீரின் கருணையால், ராஜராஜன் என்ற அந்த இளைஞர் சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, ராஜராஜன் நாடு திரும்ப உள்ளார். கடந்த அக்டோபர்-26,2016 அன்று,ஒரு முகவர் மூலம் ராஜராஜன் குவைத்தில் வேலைக்காக வந்தார்.

இது ராஜராஜனின் முதல் வெளிநாட்டுப் பயணம், ஆனால் குவைத்துக்கு வந்த அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ராஜராஜன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு, குவைத் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் கைது செய்யப்பட்ட இரண்டு வாரங்கள் வரை அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரியாமலேயே இருந்தது. இந்தியா, தமிழ்நாடு, திருச்சி ஸ்ரீரங்கம் அயிலப்பேட்டை வடக்கு தெருவில் வசிப்பவர் ராஜராஜன்.

தனது நண்பர் அப்துல்லா மூலம், குமரேசன் என்ற முகவர் வழியாக, ராஜராஜன் குவைத்துக்கு காதீம்(வீட்டு வேலை) விசாவை ஏற்பாடு செய்தார். அக்டோபர்-22, 2016 அன்று, குமரேசனுடன் குவைத் வருவதற்காக சென்னை வந்தார். பயணத்திற்கு முந்தைய நாள் குமரேசன் ராஜராஜனின் உடைமைகள் இருந்த பைகளுக்குப் பதிலாக புதிய பெட்டியில் பொருட்கள் நிரப்பப்பட்டு, அத்துடன் கைப்பையையும் வழங்கினார். இதுகுறித்து ராஜராஜன் சந்தேகம் தெரிவித்தபோது,பழைய பெட்டி மோசமாக இருக்கிறது, வெளிநாடு செல்கிறாயே எனவே புதிய பெட்டியை கொடுத்ததாக குமரேசன் பதிலளித்தார். இதை தொடர்ந்து கைப்பையைத் திறந்து பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டைக் காட்டினார்.

இதை தொடர்ந்து குமரேசன் ராஜராஜன் பொருட்கள் இருந்த பையில் ராஜராஜனின் உடைமைகள் தான் இருக்கிறது என்பதை லக்கேஜ் பையை திறந்து காட்ட தயாராக இருக்கவில்லை, இதற்க்கு அவர் கூறிய காரணம் விமானம் புறப்பட நேரமாகி விட்டதால் லக்கேஜ் பையைத் திறக்க நேரமில்லை என்று ராஜராஜனிடம் கூறினார். அன்று மாலையே ராஜராஜன் சென்னையில் இருந்து குவைத் திரும்பினார். மறுநாள் குவைத் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ராஜராஜன் பெட்டியில் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் நாட்டில் தான் கைது செய்யப்பட்டது தெரிந்தது. ராஜராஜனுக்கு என்ன நடந்தது என்றோ, எதற்காக அவரை போலீஸ் காவலில் எடுத்தார்கள் என்றோ புரியவில்லை. ராஜராஜனுக்கு விஷயங்கள் புரிய இரண்டு வாரங்கள் ஆனது. உடனே நாட்டில் உள்ள தன்னுடைய ஒரே தங்கையான அன்பரசியை அழைத்து தன் நிலையை விளக்கினார். குமரேசன் வீட்டிற்கு சென்றாள் ஆனால் அது பூட்டியிருந்தது. அவரது மாமா பழனியின் வீட்டிற்குமு தேடி சென்றார் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கு குமரேசன் தான் காரணம் எனக் கூறி, நண்பர் அப்துல்லாவும் கைவிரித்தார்.ராஜராஜனின் சகோதரி அன்பரசி சென்னையில் உள்ள வீட்டுத் தொழிலாளர் நல அறக்கட்டளையை அணுகினார். அவர்களின் ஒத்துழைப்புடன், தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், தனது சகோதரரின் விடுதலைக்காக குவைத் மனித உரிமைச் சங்கத்திடம் அவர் முறையிட்டார்.

தமிழக அரசின் துணைச் செயலாளர் செந்தில் குமார், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தார். குவைத்துக்கான அப்போதைய இந்திய தூதர் ஜீவா சாகர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிடுமாறு முதன்மை செயலாளரும், சமூக நலத்துறை அதிகாரியுமான பி.பி.நாராயணனுக்கு உத்தரவிட்டார். பி.பி.நாராயணன் குவைத் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய குவைத் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ராஜராஜன் நிரபராதி என நம்ப வைக்க தேவையான முயற்சிகளை எடுத்தார். அதன் பலனாக, 2017ல், சிறைக் கைதிகளுக்கு அமீர் வழங்கிய தளர்வு பட்டியலில், ராஜராஜனும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, ஆயுள் தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்

மேலும் ராஜராஜன் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த நன்னடத்தை அறிக்கைகளும், அவரது தண்டனையை படிப்படியாகக் குறைக்க வழிவகுத்தன.தற்போது அவரை நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூதரகத்திலிருந்து அவுட்பாஸும் வழங்கப்பட்டது. கடந்த நாள், ராஜராஜன் நாட்டு கடத்தல் மையத்தில் இருந்து தனது சகோதரிக்கு போன் செய்து தான் வீடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவித்தார். விசாரணைகள் நிறைவடைந்த நிலையில்,எட்டு வருட சிறைவாசத்திற்குப் பிறகு குவைத் அமீரின் தயவில் ராஜராஜன் விரைவில் அடுத்த சில தினங்களில் தாயகம் திரும்புவார்.

குவைத்தில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் குற்றவாளிக்கு தண்டனைகள் பின்வருமாறு வழங்கபடும். இதன்படி போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வியாபாரிகள் அல்லது இடைத்தரகர்களுக்கு அதிகபட்ச தண்டனையை குவைத் நீதித்துறை வழங்குகிறது. மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை(வாழ்க்கையின் இறுதி வரை சிறையில்) , மரண தண்டனை அல்லது 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் வழங்கபடுகிறது. இந்த பட்டியலில் உள்ள வழக்கில் தான் சேர்க்கப்பட்டார் ராஜராஜனும். மேலும், போதை மருந்து பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

ராஜராஜனை சிக்கவைத்த இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த முகவர் மீது எந்த வழக்கும் இல்லை, அதேபோல் முக்கிய குற்றவாளியான குமரேசன், அப்துல்லா மீதும் எந்த வழக்கு இல்லை. அண்ணனை பொய் வழக்கில் சிக்க வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அன்பரசி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதிக செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குவைத் மனித உரிமைகள் சங்கத்தின் உறுப்பினரான ஆல்வின் ஜோஸ், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் ஆன்லைனில் புகார் செய்தார், ஆனால் எந்த நடவடிக்கையும் இவர்கள் மீது இதுவரை எடுக்கப்படவில்லை. பிறகு எப்படி ஊரில் உள்ள இதுபோன்ற போலியான ஏஜென்சிகளை நடத்தும் நபர்களுக்கு எப்படி பயம் வரும். இப்படி சிக்க வைக்கின்ற தாயகத்தில் உள்ள நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோதமான மனசாட்சியற்ற செயல்கள் ஓரளவாவது குறையும்.

ஒருவருக்கு மரணதண்டனை வரையில் கிடைக்கின்ற இதுபோன்ற செயல்களை செய்கின்ற நபர்களுக்கும் பாதிக்கப்படுகின்ற நபர்களுக்கு வ‌ளைகுடா நாடுகளில் வழங்குகின்ற அதே தண்டனையை தாயகத்தில் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரதும் வேண்டுகோளாக உள்ளளது. இதுபோன்ற வழக்குகளில் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள அப்பாவிகளான தன்னுடைய உடன் பிறப்புகளை சட்டபடி மீட்க புகார்களுடன் பலர் அணுகுகிறார்கள், ஆனால் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசுகளால் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் இந்த விஷயத்தில் எடுப்பதில்லை, இது வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடு செல்பவர்களிடையே மிகுந்த கவலையை உருவாக்குகிறது. இதை மத்திய அரசு முறையாக பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait Emir | Indian Worker

Add your comments to Gulf News

Sunday, November 10, 2024

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் பழைமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அரசு செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது

Image credit:இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தின் புகைப்படம்

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெண்கலயுகத்தில் தில்முன் கலாச்சாரத்திற்கு முந்தைய காலத்தில் அங்கிருந்ததாக நம்பப்படும் ஒரு கோவிலின் எச்சங்களை குவைத்தின் ஃபைலாகா தீவு பகுதியிலிருந்து டேனிஷ் தொல்பொருள் ஆய்வுக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.

Image: கோயிலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்

அரேபிய வளைகுடாவில், முக்கியமான கலாச்சார, வர்த்தகம் மற்றும் சமூக பாரம்பரியத்தை புதிய கண்டுபிடிப்பு எடுத்துக்காட்டுகிறது. குவைத் தேசிய கலாச்சார, கலை மற்றும் இலக்கிய கவுன்சிலின்(என்.சி.சி.ஏ.எல்) உதவி பொதுச்செயலாளர் முஹம்மது பின் ரேடா ஒரு செய்திக்குறிப்பில் நேற்று(09/11/2024) சனிக்கிழமை மாலையில் இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

Image: கோயிலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்

ஃபைலாகா தீவில் அமைந்துள்ள பழமையான அரண்மனையின் கிழக்குப்பகுதியில் நடத்திய தீவிர முயற்சிக்குப் பிறகு இந்த கோயிலின் எச்சங்கள்(சிதைந்த பாகங்கள்) கண்டுபிடிக்கப்பட்டன. முன்னதாக, மற்றொரு கோவிலின் எச்சங்களும் இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. தில்முன் என்பது கிருஸ்துவுக்கு முன்பு(கிமு)3 மில்லினியத்தில் இருந்து கிழக்கு அரேபியாவில் பண்டைய செமிடிக் மொழி பேசும் வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Image: கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்

அவர்களின் மதம் மற்றும் பாரம்பரியமான பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதில் புதிய கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல் என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பான செய்தியை குவைத் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான குணாவும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

Image: கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait News | Kuwait Temple

Add your comments to Gulf News